பேராண்மை

நவம்பர் 5, 2009 | திரை விமர்சனம்

Peraanmaiஇப்படி ஒரு படத்தை எடுக்கவே ஒரு பேராண்மை வேண்டும்! அது ஜனநாதனிடம் நிறைய இருக்கிறது. மலைஜாதி இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே ஒரு சூரியனை, சிம்னி விளக்காக வைத்திருக்கிற அதிகார வர்க்கத்தின் பித்தலாட்டத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார். பெரிய ஹீரோ என்ற எவ்வித அலட்டலுக்கும் இடம் கொடுக்காமல் ஒத்துழைத்த ஜெயம் ரவிக்கும் ஒரு ஓ….ஹோ, ஆஹா!

சென்னையிலிருந்து பயிற்சிக்காக காட்டுப்பகுதிக்கு செல்லும் என்சிசி மாணவிகளில் ஐவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்கும் பெரும் பொறுப்பு ரவிக்கு. மேலதிகாரியான பொன்வண்ணன், அவரை ஜாதி பெயர் சொல்லி அவ்வப்போது இடறுவதும் நடக்கிறது. காட்டுக்குள் போகும் ரவி, மாலைக்குள் திரும்பி வராமல் சிக்கிக்கொள்ள, வயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்கிறார்கள் பெற்றோர். சமயம் பார்த்து ரவிக்கு ‘காமுகன்’ பட்டத்தை கட்ட தயாராகிறார் பொன்வண்ணன். ஆனால் காட்டிற்குள் நடப்பதோ வேறு. அந்நிய சக்திகளின் ஊடுருவலை கண்கூடாக பார்க்கும் ரவி, அவர்கள் வந்த காரணத்தையும் அறிகிறார். இந்தியா அனுப்பும் ராக்கெட்டை சீர்குலைக்க வந்த தீவிரவாதிகளான அவர்களை இந்த மாணவிகளின் உதவியுடன் போட்டுத்தள்ளி ராக்கெட்டையும், இந்தியாவின் மானத்தையும் காக்கிறார். முடிவு…? நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் ஷாக் சமாச்சாரம்தான்!

முந்தைய படங்களில் தங்கமாக இருந்த ரவியின் அங்கம், இந்த படத்தில் தார் டின் போல இறுகி கிடக்கிறது. ஒரு காட்சியில் கோவணத்தோடு தோன்றுகிற அளவுக்கு கேரக்டரோடு மிக்ஸ் ஆகியிருக்கிறார். கூட வரும் மாணவிகளின் கிண்டல்களை கேட்டு ஒரு காட்சியலாவது உர்ர்ர்ர்ர்ராக வேண்டுமே? ம்ஹ§ம்! தீவிரவாதிகளை முறியடித்து ராக்கெட்டை காப்பாற்றுகிற வரைக்கும் அவர் உடம்பில் ஓடுகிற ஆயிரம் வாட் மின்சாரத்தை தியேட்டரிலும் உணர முடிகிறது.

ஐந்து மாணவிகளில் சரண்யா மட்டும் பரிதாபம். இவருக்கும் ரவிக்கும் இடையே உண்டாகிற மெல்லிய காதல், அரும்பிய சில நிமிடங்களிலேயே உலர்ந்து போவது அச்சச்சோ! மற்ற மாணவிகள் வாயெல்லாம் பினாயில் அடிக்கிற அளவுக்கு படு மோசம். கொஞ்சம் கவனித்திருக்கலாமே ஜனா சார்… (பாம்பு ஜோக்குக்கு பக்கத்து சீட் ஆம்பளைங்களே நெளியுறாங்க) அதே நேரத்தில் வசனங்களில் அக்னி மழை பொழிந்திருக்கிறார் ஜனா. ஒவ்வொன்றும் கந்தகத்தில் ஊறப்போட்ட கம்யூனிச சிந்தனைகள்…

பொன்வண்ணனின் அதிகப்படியான டயலாக்கை கேட்க விடாமல் சென்சார் ‘கவனித்து’ இருக்கிறது. ஆனால் அதுவேதான் கவன ஈர்ப்பையும் தருகிறது. அந்த மலைஜாதி மக்களின் வெள்ளந்தி அன்பையும், விவகாரமான கோபத்தையும் அடுத்தடுத்த காண்பித்து அதிர்ச்சியை தந்திருக்கிறார் இயக்குனர். தலைகீழாக ஓடிவரும் அந்த நபர் மலைக்க வைக்கிறார்.

முதல் ஐந்து பேரை போட்டுத்தள்ளுகிற ஜெயம் ரவி அண் கோவின் அந்த திட்டமிடலில் ஏகத்திற்கும் பரபரப்பு! ஸ்டண்ட் மாஸ்டரின் கூர்மைக்கு ஒரு சபாஷ். காட்டுக்குள் கை பிடித்து அழைத்து போயிருக்கிறது சதீஷ்குமாரின் கேமிரா. ஒரே ஷாட்டில் ரவியிடம் துவங்கி அப்படியே நகர்ந்து வெள்ளைக்காரர்கள் மேல் பரவி, ராக்கெட் தளத்தில் முடிவடையும் போது “வாரே வாவ்…” என்று கூச்சலிட வைக்கிறார் மனுஷன்!

லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றையெல்லாம் பொருத்துக் கொள்வதுதான் நமது பேராண்மையும் கூட!

-ஆர்.எஸ்.அந்தணன்

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

Google search results ratings, 8.9 out of 10 based on 2109 ratings
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat