அபிஷேக் இயக்கத்தில் ‘கையெழுத்து’!
ஒரு படம் முடிவதற்குள்ளாகவே முட்டிக் கொள்ளும் இயக்குநர்கள்- நடிகர்களுக்கு மத்தியில், மீண்டும் இணைகிறது ஒரு இயக்குநர் – நடிகர் கூட்டணி. அது அபிஷேக்- ஷான்.
‘கதை’ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார் மோகமுள் அபிஷேக். இதே படத்தில் அறிமுகமாகும் புதிய கதாநாயகன் ஷான்குமார். அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர்.
கதை படம் முடிவதற்கு முன்பே அபிஷேக்கின் இன்னொரு கதைக்கு தயாரிப்பாளர் தயாராகிவிட்டார். அவர் ஹெச்டுபி ஸ்டுடியோவின் ஒய் சக்கரவர்த்தி.
இந்த இரண்டாவது படத்தில் நாயகனாக யாரை இயக்கலாம் என யோசித்த அபிஷேக், கதையில் அசத்தல் திறமை காட்டிய ஷான் குமாரையே ஒப்பந்தம் செய்துவிட்டார்.
“சும்மா சொல்லக் கூடாது… ‘கதை’ படத்தில் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து காட்டினார் ஷான். 20 படம் நடித்த அனுபவசாலியின் தொழில் முறை அணுகுமுறையை அந்தப் படத்தில் காட்டினார். அதுதான் அவருடன் இரண்டாவது முறையாக இணைய வைத்தது” என்கிறார் இயக்குநர் அபிஷேக். கையெழுத்தில் கதாநாயகனுக்கு இணையான பாத்திரத்தில் வருகிறாராம் அபிஷேக். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.
அபுஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த பால்ஜே இசையமைக்கிறார். முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கிறார்.
ஹெச் டு பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனம் விரைவில் மேலும் பல புதிய படங்களைத் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to this page