நான் ஒரு நடிகை; அரசியல்வாதி அல்ல: அசின் ஆக்ரோஷம்
நான் ஒரு நடிகை ; அரசியல்வாதி அல்ல என்று இலங்கை சூட்டிங் விவகாரத்தில் நடிகை அசின் ஆக்ரோஷ கருத்தை தெரிவித்துள்ளார். நடிகை அசின் ரெடி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் அசின் பங்கேற்கக் கூடாது என்று தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளை மீறி அசின் இலங்கை சென்று சூட்டிங்கில் பங்கேற்றார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அசின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், `நான் ஒரு நடிகை. படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டரும்தான் அதை முடிவு செய்கிறார்கள். என்றாலும், தற்போதைய நிலைமைகளை அவர்களிடம் எடுத்து சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. படம் எடுப்பவர்களின் முடிவுகளை என்னால் மீற முடியாது. நான் ஒரு நடிகை, அரசியல்வாதி அல்ல. என்னை பிரச்சினைக்குள் சிக்கவைக்க வேண்டாம். கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று, ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். இந்திய கப்பல் படை தலைமை அட்மிரல் நிர்மல்வர்மா 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்திருக்கிறார். தினமும் சென்னையில் இருந்து 6 விமானங்கள் இலங்கை செல்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை போகிறார்கள். என்னை மட்டும் விமர்சிப்பது ஏன்? கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா?
நடிப்பது, என் தொழில். அதை செய்வதற்கே இலங்கை வந்து இருக்கிறேன். சினிமாவும், விளையாட்டும் எல்லோருக்கும் பொதுவானது. அவைகளை அரசியல் ஆக்கக்கூடாது. இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னை சந்தித்தார்கள். என் நடிப்பை பாராட்டி, உற்சாகப்படுத்தினார்கள். எனக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

Link to this page