ராஜபக்சே மனைவியுடன் வவுனியா மருத்துவமனையைப் பார்வையிட்ட அசின்!
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் நடிகர் சங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை யில் படப்பிடிப்புக்காகச் சென்ற அசின், படப்பிடிப்பைத் தவிர வேறு வேலைகளையும் பார்த்து வருகிறார்.
இலங்கை அரசின் சிறப்பு விருந்தினர் என்ற அந்தஸ்துடன் அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்.
கிட்டத் தட்ட இலங்கை அரசின் விளம்பரத் தூதர் ரேஞ்சுக்கு இப்போது மாறிப்போன அசின், இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் வவுனியாவுக்கு நேற்று சென்றார்.
அங்கு அவருக்கு தமிழ் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. வவுனியா பொது மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளை ராஜபக்சே மனைவியுடன் சுற்றிப் பார்த்த அசின், அங்குள்ள தமிழ் நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
தமிழினப் படுகொலை தொடர்பில், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக இலங்கையை முன்னிறுத்த அத்தனை முயற்சிகளையும் தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்டு வரும் சூழலில், அதை முறியறிடிக்க இந்திய நடிக நடிகையர்களைப் பயன்படுத்த ராஜபக்சே அரசு முயன்று வருகிறது.
சல்மான் கான், விவேக் ஓபராய் போன்றவர்களுக்கு ஏற்கெனவே வடக்கு புனரமைப்புத் திட்ட தூதர் பொறுப்புகளை வழங்கியுள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் அசினும் சேருவார் என்று தெரிகிறது.

Link to this page