ஆனந்தபுரத்து வீடு – திரை விமர்சனம்
லட்டு இல்லாத திருப்பதி, பஞ்சாமிர்தம் இல்லாத பழனி, மக்கள் நெரிசல் இல்லாத ரங்கநாதன் தெரு அதே போல பயம் இல்லாத ஒரு திகில் படம்தான் ‘ஆனந்தபுரத்து வீடு’.
நாயகன் நந்தாவின் சிறு வயதில் அவருடைய அப்பாவும், அம்மாவும் கார் விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார்கள். இதனால் தனது கிராமத்தை விட்டு சென்னையில் வாழ்ந்துவரும் நந்தா, தனது தொழிலில் ஏற்பட்ட கடன் சுமையால் தன் மனைவி, குழந்தையுடன் தனது கிராமத்தில் இருக்கும் தம் பெற்றொர்கள் வாழ்ந்த தனது சொந்த வீட்டிற்கு வருகிறார்.
அந்த வீட்டில் இறந்துபோன நந்தாவின் அப்பா, அம்மா ஆகியோரது ஆவிகள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆவிகள் நந்தாவின் ஐந்து வயது பிள்ளையின் கண்களுக்கு தெரிய, பிறகு நந்தாவின் மனைவி சாயாசிங், நந்தா என அனைவருக்கும் காட்சியளிக்கிறது. இந்த ஆவிகளால் நந்தாவின் குடிம்பத்திற்கு என்ன நிகழ்கிறது என்ற முடிவை திகில் படங்களுக்கு உண்டான பார்மூலாவில் இருந்து முற்றிலும் விலகி குழந்தைகளும் பார்க்கக்கூடிய விதத்தில் சொல்லியிருப்பதே ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தின் கதை.
திகில் படங்களுக்கு நேர்மாறனப் படம். பயமுறுத்தும் ஆவிகளை பார்த்து பழகிப்போன ரசிகர்களுக்கு பாசத்தை காட்டும் ஆவிகளின் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நாகா. படம் முழுவதும் ஆவிகள் ஆட்கொள்கிறதோ இல்லையோ கிராபிக்ஸ் ஆட்கொள்கிறது.
பழிவாங்கும் ஆவிகளுக்கிடையே பாசத்திற்காக ஏங்கும் பெற்றோர் ஆவிகள். பேரனிடம் விலையாடுவது, தன் மகனின் காயத்திற்கு மறுந்து போடுவது என இந்த ஆவிகளின் பாச விளையாட்டு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.
கொடூர உருவங்களை காட்டி பயமுறுத்தாமல் எந்த உருவத்தையும் காட்டாமல் சில காட்சிகளில் நம்மை சிலிர்க்க வைக்கவும் செய்கிறார் இயக்குநர் நாகா. குறிப்பாக படத்தின் முதல் காட்சியில் நம்மை மிரலவைக்கிறது. ஆனால் அந்த மிரட்டல் படம் முழுவது இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நந்தாவுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு ஏதும் இல்லை, சில காட்சிகளில் அழவேண்டும், சிறிது சென்டிமென்டாக வசனம் பேச வேண்டும், என கொடுக்கப்பட்ட சின்ன வேலையை சின்னாபின்னமாக்கமல் சரியாக செய்திருக்கிறார்.
அழகான அம்மாவாக வரும் சாயாசிங், எப்போதும் போல ஆவிகள் இருப்பதாக கருதி அலறுகிறார். பிறகு ஆவிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் செய்கிறார். நந்தாவின் குழந்தையாக வரும் ஐந்து வயது ஆர்யன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் இவர்தான். ஆனால் இவருக்கே சில இடங்களில் முக்கியத்துவம் இல்லை (ஆவிகளுக்கே முக்கியத்துவம் இல்ல)
பேய் ஓட்டும் கதாபாத்திரம், பணத்தின் மீது ஆசை கொண்ட நந்தாவின் நண்பராக வரும் கிருஷ்ணா போன்ற கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் அருண்மணி மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ்கிருஷ்ணா பாராட்டக்குரியவர்கள். ரமேஷ் கிருஷ்ணாவின் இசையில் ‘சித்திரவானம்…’, ‘தாயே எங்கே…’ என்ற இரண்டு பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் தன்னை தலை நிமிர்த்தி காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.
பொதுவாக இதுபோன்ற திகில் படங்களை 18 வரதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்ககூடிய திகில் படம் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு திகில் இல்லாத திகில்படம்.
‘ஆனந்தபுரத்து வீடு’ – அமைதியான வீடு
ஜெ.சுகுமார்

Link to this page