குறளரசனுக்கு என்ன பெயர்?
“தடதடக்கும் தள்ளுவண்டிக்கு பென்ஸ் எனப் பெயரிட்டால் சொகுசாகிவிடுமா?’ என கேள்வி கேட்டால், கேட்பவர்களின் அறியாமையின் மீது இரக்கம்தானே மேலிடும்….! அப்படித் தான் சிம்புவைப் பரிதாபமாகப் பார்க்கின்றனர் கோலிவுட்டில் பலர்.
ஏறுமுகத்தில்தானே இருக்கிறது அவரது சினிமாகிராஃப்; அப்புறம் எதற்கு அடிக்கடி பெயரைப் பிரித்து மேய்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. ஆரம்பத்தில் சிலம்பரசனாக அறிமுகமான இவர், பின்னர் சிம்பு ஆனார். சில ஆண்டுகளில், கவனிக்காமல் விட்டுவிட்ட பிற்பாதியை எடுத்துக் கோர்த்து, பழையபடி சிலம்பரசனானார்.
“என் பெயர் பேபி’ என சொல்லும் மூதாட்டிக்கு ஏற்படும் சங்கோஜம் இருவருக்கும் வந்தது போல. 20 ஆண்டுகள் நெருங்கிய பின்னரும் ஒருவரால் லிட்டிலாகவே இருக்க முடியாது என்பதால், “யங்’கை உடன் சேர்த்து, “யங் சூப்பர் ஸ்டார்’ எனப் புதுப்பெயரெடுத்தார். இப்போது, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., வரிசையில் எஸ்.டி.ஆர்., என ரைமிங்காக பெயரை மாற்றியுள்ளார்.
தன்னைப் பற்றிய விளம்பரங்களில் எஸ்.டி.ஆர்., எனப் போடவேண்டும் என மன்றங்களுக்கு கூறியுள்ள சிலம்பரசன் என்கிற சிம்பு என்கிற எஸ்.டி.ஆர்., அதை முழுவீச்சில் கடைபிடிக்கத் துவங்கிவிட்டார். “சிம்பு சிம்பு’ என சிறுநாக்கு சிதறுமளக்கு கத்தினாலும் திரும்ப மறுக்கும் இவர், எஸ்.டி.ஆர்., என அழைத்தால் உடனே பதில் தருகிறாராம்.
“இந்தப் பெயர் மாற்றத்துக்கு நிச்சயம் ஜோதிடம் காரணமில்லை’ என்கிறனர்.
எஸ்.டி.ஆரின் தம்பி குறளரசனும் விரைவில் ஹீரோவாக உதயமாக உள்ளார். இவர் தனது பெயரை, அண்ணன் பாணியில் சுருக்காமல் கே.டி.ஆர்., எனத்தான் வைப்பார் என கணிக்கின்றனர் சினிமாப் புள்ளிகள். ஆம்… சிலம்பரசனை சிம்புவாக்கலாம்… குறளரசனை…?!

Link to this page