என்மேல் அவதூறு கூறுகிறார்கள்! – பசப்பும் அசின்
இடத்துக்கேற்ற நிறம் மாறும் கலையில் அசினுக்கு பிஎச்டி பட்டமே தரலாம். நேற்று வரை சென்னைக்கு வரவே அச்சமாக உள்ளதென்றும், கொழும்பிலேயே இருக்க ஆசையாக உள்ளதென்றும் இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசி வந்தவர், இப்போது இருப்பது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்!
விஜய்யுடன் காவல் காதல் படப்பிடிப்பிலிருந்தவரை, சில நிருபர்கள் அணுகி, அவரது இந்த இரட்டை நிலைப்பாடு மற்றும் நடிகர் சங்கத்தின் கண்டனம் குறித்துக் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியது:
“நான் ஒரு நடிகை. நடிக்கக் கூப்பிட்டால் போய்த்தான் ஆக வேண்டும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்கு வர பயமாக உள்ளதென்று நான் கூறியதாக நினைவில்லை.
என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள். ஏற்கனவே இந்தி படப்பிடிப் புக்காக மும்பை போனதும் நான் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து விட்டதாக வதந்திகள் கிளப்பினர். தொழில் விஷயமாகத்தான் அங்கு போனேன்.
மலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்ததும் சென்னையில் தங்கினேன். அதுபோல் இந்திப் படங்களில் நடிப்பதால் மும்பைக்கு போனேன்.
தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன். விஜய் பழக இனிமையானவர். நிறைய ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.
சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்…” என்றார்.

Link to this page