கமல் விழா.. கடுப்பில் ‘அம்மா’!
கமல் ஹாஸனுக்கு கேரள அரசு எடுக்கவிருக்கும் பாராட்டு விழாவுக்கு கேரள நடிகர் சங்கமான அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அவர் தமிழில் பெரிய அளவில் நடிப்பதற்கு முன் மலையாளத்தில்தான் நிறைய படங்களில் நடித்தார்.
எனவே கமல் கேரள திரையுலகுக்கு ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில் அவருக்கு மாபெரும் விழா ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது கேரள அரசு. ஆனால் இந்த விழாவுக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாக மாறியிருக்கிறது கேரள நடிகர் சங்கமான அம்மா.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கமல் சாதனையாளர்தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் முன்னுரிமை யாருக்குத் தரப்பட வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மலையாள திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் ஐம்பது வருடங்களைத் தாண்டி கலையுலக சேவையாற்றி வருகிறார்கள். முதலில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துங்கள். பிறகு தமிழகத்திலிருந்து நடிகர்களைக் கூட்டி வந்து பாராட்டலாம்” என்று கடுப்புடன் கூறியுள்ளது.
இம்மாதம் 22 ந் தேதி கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் இந்த விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கமல் கவுரவிக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கும் அம்மா, அமைப்பை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் விரும்பினால் போகலாம் என்று கூறியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த மலையாள கலைஞர்களைப் பாராட்டுங்கள், கெளரவியுங்கள் என்று கூறும் மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தினர், 50 ஆண்டுகளுக்கு மேல் மலையாள சினிமாவுக்கு ‘சேவை’ செய்த திலகனை ‘கௌரவிக்கும்’ விதம் உலகமறிந்தது. திலகனை நடிக்கவே விடாமல் தடுத்து வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் மலையாளத் திரைப்படத் துறையினர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்ததைப் போல மலையாளத் திரையுலகுக்கும் பெருமை சேர்த்தவரான கமல்ஹாசனுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி்ப்பது வியப்பாக மட்டுமல்லாமல் கேலிக்கூத்தாக உள்ளது.
கேரள திரைப்படங்கள் கொச்சியைத் தாண்டாமல் போனதற்கான காரணம் இப்போதல்லவா புரிகிறது!

Link to this page