கேரளாவில் கமல் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கண் தானம்
கேரளத்தில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் கண்கள் தான முகாம் நடைபெற்றது.
இதில் கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ பேபி உள்பட ஆயிரக்கணக்கானோர் கண்களை தானம் செய்து உயில் எழுதிக் கொடுத்தனர்.
கேரளாவில் கல்வித் துறை, சுகாதாரத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நேற்று திருவனந்தபுரம் தலைமைச் செயலக தர்பார் அரங்கில் ‘தர்சனம்’ என்ற பெயரில் கண்தான முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கேரள கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ. பேபி முன்னிலை வகிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி, பொதுப் பணித்துறை மந்திரி எம்.விஜயகுமார், சுகாதாரத்துறை மந்திரி பி.கே.ஸ்ரீமதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
விழாவில் கேரள கல்வித் துறை சார்பில் மந்திரி எம்.ஏ.பேபி உள்பட அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் கண்களை தானமாக வழங்கி எழுதிக் கொடுத்த உயிலை நடிகர் கமல்ஹாசனிடம் வழங்கினார்.
தொடர்ந்து சுகாதாரத் துறை, நாட்டு நலப்பணி திட்ட அமைப்புகள், ரசிகர் மன்றங்கள், வி.எஸ்.எஸ்.சி. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்களை தானமான வழங்குவது குறித்தான உயிலை நடிகர் கமல்ஹாசனிடம் வழங்கினார்கள்.
அதனை பெற்றுக் கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “கண்களை தானமாக வழங்க முன் வந்த அனைவரையும் மனதார வாழ்த்தி பாராட்டுகிறேன்.
தானத்திலேயே சிறந்த தானம் கண்தானம் ஆகும். அதன்படி கண்களை தானமாக கொடுத்து கண் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை பெற வழிகாட்டும் வகையில் இப்போது கேரள அரசு எடுத்துள்ள இந்த ஒரு நல்ல முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க எந்நேரமும் நான் தயாராக உள்ளேன்…,” என்றார்.
பின்னர் திருவனந்தபுரம் கனகக்குன்று கொட்டாரத்திற்கு சென்ற கமல், அங்கு “சினிமாத் துறையில் கமல் 50 ஆண்டுகள்” என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டார். மாலையில் அமைச்சர் எம்.ஏ.பேபி வீட்டில் நடந்த ஓண விருந்திலும் பங்கேற்றார்.

Link to this page