பாடல் வெளியீட்டு விழா புறக்கணிப்பு: நயன்தாரா மீது ஆர்யா வருத்தம்
ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் நயன்தாரா விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.
விழாவில் பேசிய ஆர்யா, நயன்தாரா கலந்து கொள்ளாததற்கு வருத்தம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் இவ்விழாவுக்கு வந்துள்ளனர். ஆனால் நயன்தாரா வராதது குறையாக உள்ளது. அவரை இங்கு வரவழைக்க முயற்சிகள் செய்தோம். அவருக்கு பாலிசி இல்லாததால் வர முடியவில்லை. அதாவது இதுபோன்ற ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு போவதில்லை என்பதை பாலிசியாக வைத்துள்ளாராம். அதனால்தான் வரவில்லை. படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சந்தானம் காமெடியும் நன்றாக வந்துள்ளது.
சூர்யா பேசும்போது அவரது குடும்பத்தினர் எனது நடிப்பை பாராட்டுவதாகவும் இதனால் அவருக்கு பொறாமை இருப்பதாகவும் சொன்னார். இதை கேட்கும்போது எனது குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
பாடல் சி.டி.யை சூர்யா வெளியிட்டு பேசும்போது, படத்தில் நயன்தாரா அழகாக இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இதிலும் பாட்டு நன்றாக உள்ளது என்றார்.
உதயநிதி ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பேசும் போது, ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்தார். நடிகர் பார்த்திபன், ராமநாராயணன், வி.சி. குகநாதன், அமிர்தம், ஆர்.பி. சவுத்ரி, கே.எஸ். சீனிவாசன், டி. சிவா, தனஞ் செயன், டைரக்டர்கள் தரணி, விஜய் ஆகியோர் பங்கேற்று பேசினார். டைரக்டர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Link to this page