ரஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடை
ரஜினிக்காக உயிரை கொடுக்கவும் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். இன்றும் இவரது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கைதான் தமிழகத்தில் அதிகம்.
இதற்கு பதில் மரியாதையாக என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிகர்கள் என்றுதான் தனது பேச்சையே தொடங்குவார் ரஜினி. லேட்டஸ்டாக வந்திருக்கும் அவரது அறிக்கையும் அப்படிதான் தொடங்குகிறது.
நாளை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த திருமண விழாவில் அரசியல் மற்றும் திரைத்துறை விஐபிகள் கலந்து கொள்கிறார்கள். திருணமணத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்ட ரஜினி ரசிகர்களும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
ரசிகர்களை அனுமதித்தால் சென்னை மாநகரே போதாது என்பதும், பாதுகாப்புக்கு துணை ராணுவமே வரவேண்டியிருக்கும் என்பதும் சூப்பர் ஸ்டாருக்கு தெரியாததல்ல. அதனால் ரசிகர்கள் யாரும் நேரில் வர வேண்டாம், ஆசிகளை மட்டும் அந்தந்த இடத்தில் இருந்து அளித்தால் போதும் என மிக மரியாதையாக சூப்பர் ஸ்டார் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Link to this page